சவூதிக்கு ஏமாற்றமளித்த கட்டாரின் பதில்
கட்டார் வழங்கிய பதில் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளிவரவில்லை. எனினும் கட்டாரின் பதில் சவூதி தலைமையிலான நாடுகளுக்கு ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையுமே பதிலாக வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
''கட்டார் இந்த விடயத்தை சீரியஸாக எடுக்கவில்லை. இந்தப் பிரச்சினையின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை '' என்று மேற்படி நாடுகள் கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளன. அத்துடன் கட்டாருக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவை சுட்டிக்காட்டியிருந்தன. எனினும் அந்த பதிலடி எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் இதுவரை சவூதி தலைமையிலான நாடுகள் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
இதற்கிடையில் இந்த விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்கவும் குவைத் தலைமையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜேர்மன் என்பன முன்வந்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை கட்டாருக்கு விஜயம் செய்த ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் கெப்ரீல், கட்டார் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான புலனாய்வை மேற்கொள்வதற்கு தமது நாடு தயாராகவிருப்பதாக அறிவித்துள்ளார்.
கட்டார் தீவிரவாத குழுக்களுக்கு உதவியளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து அவை பற்றி தெளிவுபடுத்துவதற்கு தமது நாட்டின் புலனாய்வுச் சேவையை பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் சவூதி தலைமையிலான நாடுகள் கட்டார் மீது இராணுவ ரீதியான தாக்குதல்களை நடாத்துவதற்காக வாய்ப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
---நெருக்கடிகளை சமாளிக்கத் தயாராகும் கட்டார்
சிறிய நாடான கட்டார், முன்னெப்போதும் இல்லாத அரசாங்க ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான தடைகளை சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனிடம் இருந்து எதிர்கொண்டுள்ளது.
2.7 மில்லியன் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இறக்குமதியை நம்பியிருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளமுள்ள நாடான கட்டாருக்கு இந்தக் கட்டுப்பாடுகள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.
எனினும் இந்தத் தடையினால் பாதிப்புகள் ஏற்படாதவாறு ஈரானும் துருக்கியும் கட்டாருக்கான உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கி வருகின்றன. இதேவேளை தனக்குத் தேவையான உணவை தானே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் கட்டார் சுய உணவு உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் திரவநிலை இயற்கை எரிவாயு உற்பத்தியில் கட்டார் முன்னணியில் இருக்கிறது. எதிர்வரும் ஆண்டுகளில் கட்டார், திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) உற்பத்தித் திறனை அதிகரிக்கப்போவது தொடர்பான திட்டங்களை செவ்வாயன்று அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும் கட்டார் விமானங்கள் ஏனைய வளைகுடா நாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையானது கட்டாரின் பொருளாதாரத்தில் பலத்த தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. அத்துடன் குறித்த நாடுகளைச் சேர்ந்தோர் கட்டாரில் முதலிட்டிருப்பின் அவற்றை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறும் அங்கிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளமையும் கட்டாருக்கு நெருக்கடிகளைக் கொடுத்துள்ளது.
கட்டார் வெளிவிவகார அமைச்சர் சமீபத்தில் லண்டனில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போது, தமது நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என குறிப்பிட்டிருந்தார்.
சவூதி தலைமையிலான வளைகுடா நாடுகளின் தடையானது கட்டாரின் இறைமையை முற்றுமுழுதாக குழிதோண்டிப் புதைப்பதாக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், எனினும் எமது அயல் நாடுகளுடனான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்டார் எப்போதும் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் கட்டாரின் சொந்த விடயங்களில் வேறு நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆக கட்டாருக்கும் சவூதி தலைமையிலான நாடுகளுக்குமிடையிலான முறுகல் தற்போது மற்றுமொரு கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த கட்டமாக மேற்படி கூட்டணி என்ன தீர்மானத்தை எடுக்கப் போகிறது என்பதிலேயே வளைகுடாவின் அமைதியும் எதிர்காலமும் தங்கியுள்ளது எனலாம்.
