கிளிநொச்சியில் தீ விபத்து! 2 வயது குழந்தை பலி : தந்தை படுகாயம்
கிளிநொச்சி புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 2 வயது குழந்தை உயிரிழந்ததுடன், குழந்தையின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு வேளையில் நடந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் ரமேஸ்குமார் சுயித் என்ற 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன், குழந்தையின் தந்தையான சிவசுப்பிரமணியம் ரமேஸ்குமார் 27 வயது என்பவர் தீக்காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று இரவு கடைக்கு வருகை தந்த மூவர் பொருட்களை கேட்டதாகவும், பொருட்களை எடுப்பதற்கு கடைக்குள் சென்ற போது ஒருவர் பெற்றோலை விசிறியதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவின் உதவியுடன் தர்மபுரம் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத்தடவியல் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடுகின்றனர்.
குறித்த கமராவை நீதிமன்றின் அனுமதியுடன் சோதனையிட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

No comments