கட்டார் செல்லத் தயாராகும் துருக்கி இராணுவம்!

கட்டார் செல்லத் தயாராகும் துருக்கி இராணுவம்!
ஆனால், இப்போதைய கட்டார் சர்ச்சைக்கும் இதற்கும் தொடர்பில்லை. மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.!
கட்டாரிலுள்ள துருக்கியின் இராணுவ தளத்துக்கு, துருக்கி இராணுவத்தினரை அனுப்புவதற்கான அனுமதியை, துருக்கி பாராளுமன்றம் நேற்று (07) வழங்கியுள்ளது.
சவூதி அரேபியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை முறித்து, வான் மற்றும் தரைவழி போக்குவரத்தை முடக்கியுள்ள நிலையில், துருக்கியின் இந்த தீர்மானம் கட்டாருக்கான வெளிப்படையான ஆதரவாக அமைந்துள்ளது.
ஆனால், கட்டாருக்கு துருக்கி இராணுவத்தினரை அனுப்பும் இந்த நடவடிக்கை, சவூதி அரேபியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடனான முரண்பாட்டுக்கு முன்னமே திட்டமிடப்பட்டிருந்தததாகும்.
எனவே, கட்டாருக்கு துருக்கி இராணுவம் செல்லவுள்ளதாக வெளிவந்துள்ள இந்த செய்தியைப் பார்த்து, கட்டாரில் வாழும் நம் நாட்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய தேவை இல்லை. இப்போது கட்டாரை மையப்படுத்தி ஏற்பட்டிருப்பது ஒரு இராஜதந்திர அரசியல் முரண்பாடேயன்றி, யுத்தமோ, இராணுவ நடவடிக்கைகளோ ஏற்படுவதற்கான ஒரு நகர்வல்ல.
2014 ஆம் ஆண்டு துருக்கிக்கும் கட்டாருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், கட்டாரில் துருக்கியின் இராணுவத் தளத்தை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பமாயின.
அப்போது 150 துருக்கி இராணுவத்தினர் அந்த இராணுவ தளத்தில் இருந்தனர். இப்போது மேலதிகமாக 3000 துருக்கி இராணுவத்தினரை அங்கு அனுப்புவதற்கான சட்டமூலத்துக்கே துருக்கி பாராளுமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது.
மத்திய கிழக்கில் துருக்கி அமைத்துள்ள முதலாவது இராணுவ தளம் இதுவாகும்.
கட்டார் பலஸ்தீன விடுதலைக்காக போராடுகின்ற ஹமாஸுக்கும், இக்வான்களுக்கும் ஆதரவளிக்கின்றமை உள்ளிட்ட சில காரணிகளை முன்வைத்து, சவூதி அரேபியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவை முறித்துக்கொண்டுள்ளபோதும், கட்டாருக்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக துருக்கி ஜனாதிபதி அர்தூகான் தெரிவித்துள்ளார்.
Theme images by mammuth. Powered by Blogger.