உடுவில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற உடல் தகனம்.
உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு (J/208) கிராம சேவகர் பிரிவில் உள்ள திடற்புலம் கிராமத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் நீண்ட காலத்திற்குப் பின்னர் கடந்த 09 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இறந்தவரின் உடல் ஒன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக இம் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கின்ற மயானத்தை அகற்றக் கோரியும், இதற்குப் பதிலாக மிகவும் அருகில் இருக்கின்ற மக்கள் குடியிருப்புகளில் இருந்து தூரமாக உள்ள மயானங்களைப் பயன்படுத்தக் கோரியும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் இம் மயானத்திற்கு அடாத்தாகச் சுற்று மதில் கட்ட முற்பட்டபோது ஏற்பட்ட பிரச்சினை மல்லாகம் நீதவான் நீதி மன்றம் வரை சென்றது. அங்கு இது சார்ந்த வழக்கொன்றில் கடந்த டிசம்பர் மாதமளவில் மின்சாரம் மூலம் தகனம் செய்யும் பொறிமுறையை ஆறுமாத காலப்பகுதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டளை வழங்கப்பட்டது. கடந்த யூன் மாதத்துடன் இந் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட காலப்பகுதி நிறைவடைந்தபோதும், இதுவரை இம் மயானத்தில் அது சார் கட்டுமானப் பணிகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை என்று இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்..
இந் நிலையில் கடந்த 09.07.2017 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மு.ப 10 மணியளவில் திடீரென இம் மயாணத்துக்குள் புகுந்த சிலரால் வேகமாக விறகுகள் அடுக்கப்பட்டு உடலம் ஒன்று தகனம் செய்யப்பட்டுள்ளது. இதில் சுழிபுரம் வழக்கம்பராய் சிவபூமி முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த திரு சண்முகம்பிள்ளை என்பவரது உடலே இவ்வாறு மிக நீண்ட துரத்தில் இருக்கும் இம் மயானத்திற்கு எடுத்து வரப்பட்டு எரியூட்டப்பட்டதாக அறிய முடிகின்றது.