3 மாதத்துள் 3வது முறையாக வடக்கு அமைச்சரவை மாற்றம்


வடக்கு மாகாண அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். இது கடந்த மூன்று மாதத்துள் நிகழ்ந்த மூன்றாவது அமைச்சரவை மாற்றமாகும். முன்னதாக ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகியோர் தங்கள் அமைச்சுக்களை இராஜினாமாச் செய்தபோது முதலமைச்சர் அந்த அமைச்சுக்களை கூடுதலாக பொறுப்பேற்றிருந்தார். பின்னர் இவ்விருவருடைய அமைச்சுக்களும் அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டு அவர்கள் அமைச்சுக்களெப் பொறுப்பேற்றுக்கொண்டனர். தற்போது அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் நீக்கப்பட்டு புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது. இன்றைய பதவியேற்பில் நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனின் அமைச்சில் மாற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை.
அவ்வகையில் வடமாகாண நிதி திட்டமிடல்,சட்டம் ஒழுங்கு,காணி விவகாரம், வீடமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், சுற்றுலாத்துறை, உள்ளூராட்சி , மாகாண நிர்வாகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
அதேவேளை வடமாகாண விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை,மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றார்
அத்துடன் சுகாதாரம், சுதேச மருத்துவம், சிறுவர் விவகார அமைச்சராக ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி ஞானசீலன் குணசீலன் பெறுப்பேற்றுக்கொண்டார்.
வடமாகாண பெண்கள் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவை, கூட்டுறவு, வர்த்தக வாணிபம், உணவு வழங்கல் மற்றும் விநியோகம் , சிறுதொழில் முயற்றி ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக அனந்தி சசிதரனும் இன்றையதினம் வடமாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.