கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை; 57 பாடசாலைகள் மூடப்படவுள்ளது
டிசம்பர் மாதத்தில் இடம்பெற உள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களாக இடம்பெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி முதலாவது கட்டம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 02ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெற உள்ளதுடன், இரண்டாம் கட்டம் 2018 ஜனவரி 23ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 03ம் திகதி வரை இடம்பெற உள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் மதிப்பீடு இடம்பெறும் காலத்தில் 57 பாடசாலைகள் மூடப்படவுள்ளதுடன், அந்தப் பாடசாலைகள் ஜனவரி 15ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதேவேளை சுமார் 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டு மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெற உள்ளதுடன், அந்தப் பாடசாலைகள் ஏனைய பாடசாலைகளை போன்று முதலாம் தவணைக்கு பாடசாலைகள் ஆரம்பமாகும் ஜனவரி 02ம் திகதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
