போர் வந்தால் எதிர்கொள்ள தயாராகுங்கள்: ராணுவ வீரர்கள் மத்தியில் சீன அதிபர் பேச்சு
போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராகுங்கள் என சீன ராணுவ வீரர்கள் மத்தியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பேசினார்.
சீனாவில் மக்கள் புரட்சிகர ராணுவம் தொடங்கி 90 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கான விழா ஆகஸ்ட் 1ம் தேதியன்று வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில், ராணுவ வீரர்கள், போர்தளவாடங்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஜுரிஹே ராணுவ மையத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான வீரர்கள் இதில் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பு ஒத்திகையை பார்வையிடுவதற்காக அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று நேரில் சென்றார். அப்போது ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, ராணுவ பிங் பேசுகையில், ‘‘நாட்டின் அமைதி, பாதுகாப்பு விஷயத்தில் ராணுவத்துக்கு அதிக பொறுப்பு உள்ளது.
உலகம் அமைதியாக இருப்பதற்கு பாதுகாப்பு அம்சங்கள் அவசியம். நமது நாட்டின் மீது யாராவது போர் தொடுக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எதிர்ப்பவர்களை வெற்றிகொள்ளும் திறமை நமது ராணுவத்துக்கு உள்ளது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, முன்னேற்றம் போன்றவற்றில் நமது வீரர்கள் திறம்பட செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நமது ராணுவம் உலகத்தரம் வாய்ந்தது’’ என்றார். இந்தியாவுக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சிக்கிம் பகுதிகளில் சீனா படைகளை குவித்து வருகிறது. இதனால் இந்தியா, சீனா இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இருநாடுகளும் எல்லையோர பகுதிகளில் வீரர்களை குவித்துள்ளன. பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், போருக்கு தயாராக இருக்க வேண்டும் சீன ராணுவத்தினர் மத்தியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments