பேஸ் புக் மூலம் போதை விருந்து ஏற்பாடு! - 200 பேர் கைது.
பதுளையிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில், தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தி நடத்தப்பட்ட விருந்து நடந்து கொண்டிருந்த போது, அதனைச் சுற்றிவளைத்த பொலிஸார் 200 மாணவர்களை கைது செய்துள்ளனர். அதில் கலந்து கொண்டவர்கள், ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு ஹெரோயின் சேர்த்து தயாரிக்கப்பட்ட முத்திரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விருந்தில் கலந்து கொள்வதற்காக 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் வரை டிக்கட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 200 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை போதைப்பொருள் வைத்திருந்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.200 பேரில் பதுளை பிரதேசத்தின் பிரதான பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களிடம் இருந்து 1150 மில்லிகிராம் ஹெரோயின், 6500 மில்லிகிராம் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் சேர்த்து தயாரிக்கப்பட்ட முத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டாதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
