யாழ் இந்துவின் மதிற் சுவர் இடிக்கப்படுவதை கண்ட பழைய மாணவனின் கவலையோடு கூடிய கவி
யாழ் இந்துவின் மதிற் சுவர் இடிக்கப்பட்டிருக்கிறது
எம் இதயக் கோபுரம் மண்ணோடு கலந்திருக்கிறது
எம்மை
எம் இளமையை
எம் ஆளுமையை
எம் சந்தோசங்களை
கோபத்தை, துக்கத்தை
பிரதிபலன் பாராமல்
தாங்கிய நண்பன்
எம் பள்ளிச் சுவர்
ஆருயிர் நண்பனின்
அகால மரணம் போல் பதைபதைக்கிறது இதயம்
எப்போதும் ஒரே உயரத்துடன்
நம் அத்தனை உயரங்களிலும்
தோள் கொடுத்த நண்பா
உன் முதுகில் ஏறிய அபிவிருத்தியின்
சுமை தாங்க முடியாமல் மண்ணாகிப் போனாயோ..
ஒவ்வொரு முறையும் நிறப்பூச்சு பூச
உன் அழகு குறையும்
எம் நினைவுக் கறைகள் நித்தம் படிந்து
மெருகு கூடி மீண்டும் நிமிர்ந்து நிற்பாய்
துவிச்சக்கர வண்டியை உன்னோடு உரச விட்டு
ஊர் வம்பு பேச எமக்கு வயதெல்லை இல்லையே
பரீட்சை நேர விளையாட்டிற்கு நீதானே நாயகன்
மூன்று கோடுகள் சுமந்து
கிரிக்கெட்டின் விக்கெட்கள் ஆனாய்.
சேரன் மாங்காய் கரம் சுண்டல்
சாப்பிட கரங்கள் தந்தாய்
ஆசிரியரை கண்டு மறைய அரணாய் இருந்தாய்
அடுத்த நாள் பகிஷ்கரிப்பை அலசினாய்
அழகு பெண்மை கடக்கையில்
சேர்ந்தே ரசித்தாய்
காதல் கடித காகிதம் ஆனாய் -கூடவே
காதல் தோல்வி கண்ணீரில் ஊறினாய்
உலகமகா பொய்கள் கேட்டிருப்பாய்
இந்துவின் மைந்தர் சிரிப்பில் சிலிர்ததிருப்பாய்.
கனவுகளில் பெருமைப்பட்டிருப்பாய்.
காவலரண் தகர்ப்பு கட்டளைகள் பிறப்பித்தாய்
இந்துவின் மறவர்களுக்கு ஊக்கமாய் இருந்தாய்
ஒவ்வோர் வெடிப்பொழுதுகளில்
உன்னோடு ஒட்டி முழங்காலில் இருத்தி
கன்னம் பளுக்க வாங்கியிருக்கிறோம்
எம்மை விட உனக்கே வலித்திருக்கும்..
ஆயிரமாயிரம் கதைகள் சுமந்தாய்
லட்சக்கணக்கில் நண்பர்கள் உருவாக்கினாய்
உன்னை வெறுப்பவர் யாருமிலர்
இன்று
உன் முதுகில் ஏறிய அபிவிருத்தியின்
சுமை தாங்க முடியாமல் மண்ணாகிப் போனாயோ..
பள்ளிக் காலம் முடித்த போதும்
உன்னில் சாயும் வேளையில்
இந்துவின் மைந்தனாய்தானே வாழ்வோம்
விடுமுறைக்கு ஊர் வந்தால்
உன்னை பார்க்காது திரும்போமே
இனி எப்போது
உன் தோளில் சாய்வோம் நண்பா..
இனி நினைவுச்சுவர் கொண்டு
உன்னோடு நித்தம் உறவாட
புதிதாக வரும் வலைச் சுவர்கள் வழி செய்யட்டும்...
...
சுகந்தன்